பணம் சம்பாதிக்க சென்றது குற்றமாடா? கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட புதுமாப்பிள்ளை!

தேனியில் என் சாவுக்கு காரணம் இவர்கள் தான் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட புதுமாப்பிள்ளை.

தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அண்ணாமலை பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் அண்மையில் அவரது உறவினரான ஜெயபிரியாவை திருமணம் செய்து விட்டு மீண்டும் வேலை நிமித்தமாக சவுதி அரேபியாவுக்கு திரும்பியுள்ளார். கணவன் வேலைக்கு சென்றதும் ஜெயப்பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 13 ஆம் தேதி கோபிநாத் சவுதி அரேபியாவிலிருந்து தனது ஊருக்கு வந்து தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல கூப்பிட்ட போது, தான் வரவில்லை என்று கூறியதுடன், மனைவி குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கோபிநாத்தை கடுமையாக திட்டி உள்ளனர்.

இதனால் மனம் நொந்து போன கோபிநாத், உறவினர்களுடன் சென்று வெளிநாட்டுக்கு பணம் சம்பாதிக்க சென்றது குற்றமா எனப் பேசியுள்ளார். அதன்பின் இரவு தனது வீட்டில் தனியாக இருந்த கோபிநாத் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்காததால் அவரது தந்தை அறைக்குள் சென்று பார்த்த பொழுது கோபிநாத் தூக்கு போட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சின்னமனூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோபிநாத்தின் வீட்டை பரிசோதனை செய்ததில் அங்கு அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில் நான் கோபி எழுதுகிறேன், எனக்கு வாழ விருப்பமில்லாததால் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்.

நான் இவ்வாறு செய்யாவிட்டால் குடும்பத்தினர் என்னை  நினைத்து மிகவும் வருத்தப்பட்டு இறந்துவிடுவார்கள். என் அப்பா அம்மாவுக்கு மகனாய், தம்பிக்கு ஒரு அண்ணனாய்  நான் என்னுடைய கடமைகளை முடித்து விட்டேன். இனி அவர்களை என் தம்பி பார்த்துக்கொள்வான். எனது சாவுக்கு எனது மனைவி, மாமனார், மாமியார், மைத்துனர் மற்றும் அவரது மனைவியின் உறவினர் மூவர் ஆகிய 7 பேர் தான் காரணம் எனவும், இவர்களுக்கு முறையான தண்டனை கொடுத்த பின்புதான் எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கோபிநாத்தின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் 4 பேரை கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள கோபிநாத் மனைவியின் உறவினர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

author avatar
Rebekal