#IPL2022: முதல் வெற்றியை கைப்பற்றுமா சென்னை? பெங்களூர் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 22-வது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை இவ்விரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 18 போட்டிகளிலும், பெங்களூர் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத நிலையில், பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. இதனால் சென்னை அணிக்கு இது முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.

அதேபோல பெங்களூர் அணி சிறப்பாக ஆடிவரும் நிலையில், இந்த போட்டியில் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டி சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர் தோல்விகள் காரணமாக பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், இன்றைய போட்டியில் அதிரடியாக வெற்றிபெற்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் XI:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருத்ராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தோனி, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், முகேஷ் சவுத்ரி, ஆடம் மில்னே ஆகியோர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ஃபாப் டு பிளெசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.