INDvsBAN TestSeries: அஸ்வின், குல்தீப் யாதவ் சிறப்பான ஆட்டம்! இந்தியா 410 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 410 ரன்கள் குவித்துள்ளது.

நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்த இந்த ஜோடி தனது முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ராகுலும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு இறங்கிய விராட் கோலி 1 ரன்னில் வந்த வேகத்தில் கிளம்பினார்.

இந்திய அணி 48 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாற, புஜாரா மற்றும் ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் ஆடிய ரிஷப் பந்த், 46 ரன்களில் மெஹதி ஹசன் வீசிய பந்தில் போல்டானார்.

அதன்பிறகு களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர், புஜாராவுடன் சேர்ந்து நிதானமாக ஆடினர். இருவரும் அரைசதம் கடந்து தேவையான பந்துகளில் மட்டும் ரன்கள் அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தி வந்தனர். இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் குவித்தனர்.

புஜாரா 90 ரன்களில் டைஜூல் இஸ்லாம் பௌலிங்கில் ஆட்டமிழந்தார். இதனால் சதமடிக்கும் வாய்ப்பை 10 ரன்களில் இழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து 2-வது நாளை தொடங்கிய இந்திய அணி, சில நிமிடங்களில் ஸ்ரேயஸ் ஐயர் 86 ரன்களுக்கு எபாடட் ஹூசைன் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் நிலைத்து நின்று விளையாடி ரன்கள் குவித்தனர்.

முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 410 ரன்களை எட்டியது. அஸ்வின் 58 ரன்களும், குல்தீப் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியின் தரப்பில் டைஜூல் இஸ்லாம் மற்றும் மெஹதி ஹசன் தலா 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.

author avatar
Muthu Kumar

Leave a Comment