தமிழகத்தில் இன்று…மேயர்,துணை மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்!

தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்.19 ஆம் தேதியன்று  நடைபெற்ற நிலையில்,பிப்.22 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து,மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போன்ற உள்ளாட்சி பொறுப்புகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்நிலையில்,மாநகராட்சிகளுக்கான மேயர்,துணை மேயர்,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது என  மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 9.30 மணிக்கு மறைமுகத் தேர்தலுக்கான மன்ற கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,மேயர், தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு,அதில் போட்டி இருப்பின் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து,இன்று மதியம் 2.30 மணிக்கு மாநகராட்சி துணை மேயர் மற்றும் நகராட்சி,பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலுக்கான மன்ற கூட்டம் நடைபெறுகிறது.இந்த பதவிகளுக்கு வேட்புமனுக்கள் பெறப்பட்டு, போட்டி இருப்பின் வாக்குப்பதிவு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.