இது நடந்தால் டிக்கெட் விலை 30% குறையும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு மாறினால் டிக்கெட் விலை 30% குறையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு.

ரூ.2,300 கோடி மதிப்பிலான ஐந்து வழி சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பொதுப் போக்குவரத்து அமைப்பில் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மாநில போக்குவரத்து கழகங்கள், மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளுக்கு மாறினால் டிக்கெட் விலை 30% குறையும் என்றும் மின்சார பேருந்துகளில், டீசலை விட 30 சதவீதம் கட்டணம் குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மாநில போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் விலை உயர்ந்த டீசலில் இயங்குவதால், ஒருபோதும் லாபம் ஈட்ட முடியாது. டீசலைக் காட்டிலும் குளிரூட்டப்பட்ட மின்சாரப் பேருந்துகளில் டிக்கெட் விலை 30 சதவீதம் எளிதாகக் குறையும் என்பதை முழுப்பொறுப்புடன் சொல்ல முடியும் என்றும் கூறினார்.

மேலும், நாட்டில் 50,000 மின்சார பேருந்துகளை இயக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் போக்குவரத்து முறையை நீண்டகால நோக்கில் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக, மின்சாரம், பச்சை ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் பயோ-சிஎன்ஜி போன்ற மலிவான விருப்பங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலைச் செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் 50 வருடங்கள் முன்னோக்கி செல்ல யோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

author avatar
Castro Murugan

Leave a Comment