அனுமதி இல்லை என்றால் 8-வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம்-மத்திய அரசு

மத்திய அரசானது, 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு இருந்தது. இந்த சாலையானது, பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் ஆக்கிரமித்து உருவாகும்படி அமைந்தது.  இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாய நிலங்களை அரசு,  கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் சென்னை  உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அதில்,சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பு வழங்கபட்டது. மேலும், நிலம் கையகப்படுத்த தடையும் விதித்திருந்தது.

சேலம் -சென்னை  8  வழிச்சாலை திட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக திட்டத்தின் இயக்குனர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு  இன்று திட்ட வரைபடத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.அதில், சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்கவில்லை என்றால் 8-வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம் என்று உறுதி அளித்தது.இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா,8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதிபெற தாமதமானால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.