இடைதேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்றால் நாங்கள் வேட்பாளரை அறிவிப்போம்.! ஓபிஎஸ் முடிவு.!

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால், அதற்க்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம்.  பாஜக போட்டியிடவில்லை என்றால் ஓபிஎஸ்  உடனடியாக தங்கள் வேட்பாளரை அறிவிப்பார். – ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு. 

ஈரோடு கிழக்கு மன்ற சட்டமன்ற இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே செல்கிறது. ஏற்கனவே அங்கு திமுக தனது கூட்டணி கட்சி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவனை அறிவித்து தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளது. அதேபோல் அதிமுகவும் தங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து உள்ளது.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் என இரு அணிகளாக தங்கள் தேர்தல் பணிகளில் செயல்பட்டு வருகின்றனர். இதில் இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவார்கள் அல்லது இரண்டு தரப்பும் புது சின்னத்தில் போட்டியிடுவார்களா என்ற குழப்பம் இன்னும் நிலவி வருகிறது.

இன்று காலை  இபிஎஸ் தரப்பில் ஆலோசனை கூட்டம் முடிந்து, முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து கூட்டணி, தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதே போல, தற்போது ஓ.பன்னேர்செல்வம் தரப்பில், ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்காக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. என்று குறிப்பிட்டார்.

மேலும், அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பல முறை கூறிவிட்டார் அதாவது, இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால், அதற்க்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம்.  பாஜக போட்டியிடவில்லை என்றால் ஓபிஎஸ்  உடனடியாக தங்கள் வேட்பாளரை அறிவிப்பார். ஒரு கூட்டணியில் இருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு தர வேண்டும். இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் போது பாஜக போட்டியிட்டால் சரியாக இருக்கும்.  எதனை எப்போது செய்ய வேண்டும் என ஓபிஎஸ்க்கு நன்றாக தெரியும். -என குறிப்பிட்டார்.

மேலும், இன்று வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். சின்னத்துக்கான அதிகாரம் ஒபிஎஸ் கையெழுத்தில் தான் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் கையெழுத்திட்டால் தான் இரட்டை இலையில் போட்டியிட முடியும். எனவும்  ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார் .

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment