ரிஷப் பண்டுக்கு நான் 5 மார்க் கூட கொடுக்க மாட்டேன் – சேவாக்..!!

ரிஷப் பண்டுக்கு நான் 5 மார்க் கூட கொடுக்க மாட்டேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 22 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது, இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். அதன் படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து, இதனால் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் எடுத்த சில முடிவுகளால் விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக டெல்லி அணி பேட்டிங் செய்யும் கடைசி ஓவரில் பண்ட் மறுபகுதிலிருந்த ஹெட்மயருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காதது, அடுத்ததாக டெல்லி அணி பந்து வீசிய போது கடைசி ஓவரை மார்க் ஸ்டோனிஸை வீச வைத்தது என ரிஷப் பண்ட் மேல் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ரிஷப் பண்ட் கேப்டன்ஸி குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ” ரிஷப் பண்ட் கேப்டன்ஸிக்கு 10 மார்க்கில் 5 மார்க் கூட நான் கொடுக்க மாட்டேன், எந்த நேரத்தில் எந்த மாதிரியான பந்து வீச்சாளர்களை உபயோக படுத்தவேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. ஒரு அணி அருமையான நிலையில் இருந்து மோசமான நிலைக்கு சென்றால் அதற்கு பொறுப்பு அணியின் கேப்டன் மட்டும் தான். ரிஷப் பண்ட்க்கு அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்று தெரியவில்லை. அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.