தனது மனைவியை 'கும்பகோணம் to புதுச்சேரி' சைக்கிளில் அழைத்து சென்ற கணவர்.!

தனது மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்காக கும்பகோணம் டு புதுச்சேரி சைக்கிளில் அழைத்து சென்ற கணவர்.

கும்பகோணத்தை சேர்ந்த 65 வயதுடைய அறிவழகனின் மனைவி 60 வயதுடைய மஞ்சுளா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு தனது மனைவியை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பேருந்துகள் இயங்கவில்லை. மேலும் கார் மற்றும் தனியார் வாகனங்களில் செல்ல பணம் இல்லாததால் தனது மனைவியை சைக்கிளிலேயே புதுச்சேரிக்கு அழைத்து செல்ல அறிவழகன் முடிவெடுத்தார். எனவே தனது மனைவியை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சுமார் 150 கி.மீட்டர் இரவு முழுவதும் பயணம் செய்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றார்.

இந்த தகவலை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் 2 நாட்கள் அவர்களை அங்கே தங்க வைத்து அவரது மனைவி மஞ்சுளாவிற்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் தங்களின் சொந்த செலவில் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளனர். சிகிச்சை முடிந்த பிறகு மனைவியை மீண்டும் சைக்கிளில் அழைத்து செல்ல தயாரான அறிவழகனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. புதுச்சேரி மருத்துவமனையில் இருந்து அம்புலன்ஸ் ஏற்பாடு செய்து சைக்கிளோடு சேர்த்து அவர்களையும் ஏற்றி கும்பகோணத்திற்கு இலவசமாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிவழகன் கூறுகையில், தனது மனைவிதான் எனக்கு எல்லாமே என்றும் அவள் இல்லாமல் நான் இல்லை என்று கூறியது மருத்துவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்