தைப்பூசம் 2022: வேண்டியதை அள்ளிக்கொடுக்கும் முருகப்பெருமானின் அருள் பெற தைப்பூசத்தன்று வழிபடுவது எப்படி?

வேண்டியதை அள்ளிக்கொடுக்கும் முருகப்பெருமானின் அருள் பெற தைப்பூசத்தன்று எப்படி வழிபடுவது என்று தெரிந்து கொள்ளுங்கள். 

தைப்பூசத்தன்று முருகப்பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனை செய்யப்படும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். தைபூசத்தன்றுதான் பார்வதி தேவி முருக பெருமானுக்கு வேல் வழங்கினார். இதைக்கொண்டு அசுரர்களை வதம் செய்து உலகை காத்தார் முருகப்பெருமான். சிறப்பான இந்த தினத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்க மனமுருகி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். இன்றைய தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதால் அதீத சக்தி நிலவும்.

இந்நாளில் அசைவ உணவை தவிர்த்து பாலும் பழமும் உண்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகன் கோவிலுக்கு செல்வது சிறப்பு. கணவன் மனைவி இருவரும் இணைந்து இந்த விரதத்தை மேற்கொண்டால் ஒற்றுமை தழைத்தோங்கும். சண்டையிடும் தம்பதிகளாக இருந்தால் இந்த விரதத்தின் மூலமாக அவர்களின் அன்பு வெளிப்படும். இந்த விரதத்தின் மூலமாக குழந்தை பாக்கியம் கிட்டும். தை 5 ஆம் தேதி காலை 5.58 மணியளவில் தைப்பூசம் ஆரம்பிக்கிறது. இந்த நாளில் நீங்கள் மனமுருகி முருகனை தரிசித்தால் நீங்கள் வேண்டியதை, நினைத்ததை அனைத்தும் நிறைவேற்றி தருவார்.