வரலாற்றில் இன்று(09.05.2020)…. மகாத்மாவின் அரசியல் குரு அவதரித்த தினம் இன்று….

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் அரசியல் குரு என்று அனைவராலும் போற்றப்படுபவருமான கோபாலகிருஷ்ண கோகலே (Gopal Krishna Gokale) பிறந்த தினம் வரலாற்றில்  இன்று (மே 9). அவரைப் பற்றிய சிறந்த நம்மை அறியா தகவல்கள்;

  • கோகலே  மகாராஷ்டிர மாநிலம் கோதாலுக் என்ற இடத்தில் (1866) பிறந்தார்.
  • இவரது இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், இவரின் அண்ணன் வேலை பார்த்து இவரைப் படிக்கவைத்தார். மின்சாரம் இல்லாததால் தெரு விளக்கில் படித்தார்.
  • ஒரே கால் சட்டை , ஒரு மேல் சட்டை, ஒருவேளை சாப்பாடு, அதையும் இவரேதான் சமைக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் 1884-ல் பட்டப் படிப்பை முடித்தார்.
  • அரசு வேலைவாய்ப்புகள் வந்தன. ஆனால் அதில் விருப்பமின்றி, சமூக மறுமலர்ச்சியாளர் மகாதேவ் கோவிந்த ரானடேவின் தீவிர ஆதரவாளராக மாறினார்.
  • பின் இவர் இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார்.
  • திலகர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். ஆனால், இவர் மிதவாதப் போக்கை கடைபிடித்தார்.
  • வன்முறையைத் தவிர்ப்பது, அரசு நிறுவனங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவது ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்.
  • பின் இவர், பம்பாய் சட்டப் பேரவைக்கு 1899-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிக அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுத்தர போராடினார்.
  • ஆங்கிலேய அரசின் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தை ஆதரித்தார். கோகலே மற்றும் மறுமலர்ச்சியாளர்களின் ஆதரவுடன் அந்த மசோதா சட்டமாக்கப்பட்டது.
  • இது உட்பட பல விஷயங்களில் இவருக்கும் திலகருக்கும் கருத்துவேறுபாடுகள் எழுந்தன.
  • கோகலே 1905-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். இந்திய சேவகர்கள் சங்கம் (Servants of India Society) என்ற அமைப்பை உருவாக்கினார்.
  • இந்த அமைப்பு, நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்து பள்ளிக்கூடங்களை நிறுவியது. தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.
  •  மகாத்மா காந்தி வளர்ந்துவந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு அறிவுரையாளராகத் திகழ்ந்தார். முகமது அலி ஜின்னாவுக்கும் இவரே வழிகாட்டியாக விளங்கினார்.
  • காந்திஜியின் அழைப்பின் பேரில் 1912-ல் தென்ஆப்பிரிக்கா சென்றார். அப்போது நாட்டு நடப்பு, சாமானிய மக்களின் பிரச்சினைகள் பற்றி காந்தியிடம் எடுத்துரைத்தார்.
  • ‘கோகலே என் அரசியல் குரு’ என தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் காந்தி. ‘அவர் ஸ்படிகம் போன்று தூய்மையானவர், ஆட்டுக்குட்டிபோல மென்மையானவர், சிங்கம் போல வீரம் படைத்தவர், பெருந்தன்மை உடையவர், அரசியல் அரங்குக்கு பொருத்தமானவர்’ என்றும் பாராட்டியுள்ளார் காந்தி.
  • அரசியலை ஆன்மிகமாக்கல், சமூக மேம்பாடு, அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை காந்திஜியை வெகுவாக கவர்ந்தது.
  • தன் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்து மக்கள் பணியாற்றி முக்கியமாக மறுமலர்ச்சி கொள்கையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வந்த கோபால கிருஷ்ண கோகலே  தனது 49 ஆவது வயதில் (1915) இவ்வுலகை விட்டு மறைந்தார்.
author avatar
Kaliraj