சிவனிடம் வரம் பெற்ற சூரனை வதம் செய்த ஜெயந்தி நாதர்.. சூரசம்ஹார வரலாறு.!

இன்று கந்தசஷ்டி முக்கிய விழாவான சூரசமஹாரா நிகழ்வு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான முருகன் கோவிலில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக முருகனின் 2வது அறுபடை வீடான திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு மிகவும் கோலாகலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் சூரசம்ஹாரம் : 

அறுபடை வீடுகளில் 5வது திருத்தலமான திருத்தணியில் மட்டும் சூரசம்ஹார நிகழ்வு வழக்கம்போல நடைபெறவில்லை. மற்ற 5 அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய முக்கிய ஸ்தலங்கள் , மற்ற முக்கிய முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சூரபத்மன் பிறந்தான் :

பிரம்மனின் இரு புதல்வர்களில் ஒருவரான காசிபன் ஒரு அசுர பெண்ணின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டான். அவர்களுக்கு சூரபத்மன், யானை முகமுடைய தாரகன், ஆட்டு உருவத்தில் அஜமுகி, சிங்கமுகமுடைய ஒரு குழந்தை என நான்கு புதல்வர்கள் இருந்தனர்.

சாகா வரம் :

இவர்களும் சூரபத்மன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதன் பலனாக சிவபெருமான் சூரபத்மன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு சாகா வரவேண்டும் என்று கேட்டிருந்தான் சூரன். மனித பிறவியில் பிறந்த அனைவரும் இறந்தே தீர வேண்டும் என்று சிவன் கூறவே, ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து பிறக்காத பிள்ளையால் தனக்கு அழிவு வரவேண்டும் வேண்டும் என்று வரம் பெற்று கொண்டான்.

சூரபத்மன் அராஜகம் :

இந்த வாரத்தைப் பெற்றுக் கொண்டு சூரபத்மன் தன்னை போல பல அசுரர்களை உருவாக்கி அண்ட சராசரங்கள் அனைத்தையும் ஆண்டு, இந்திரன் முதலான முப்பது முக்கோடி தேவர்களையும் சிறையில் அடைத்தான். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒழிந்து கொண்டார்.

ஆறுமுகம் :

அசுரர்களின் கொடுமை தாங்க முடியாத தேவர்கள், கைலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களை காக்குமாறு முறையிட்டனர். அப்போது சிவபெருமான் தனது நெற்றிக்கண் திறந்த தனது ஆறு குணம் கொண்ட ஆறு குழந்தைகளாக தோற்றுவித்தார். ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் என ஆறு குணங்களை குறிக்கிறது. இந்த ஆறு குழந்தைகளும் பார்வதி அம்பாள் கட்டி அணைக்க ஆறு குழந்தைகளும் ஒரு உருவம் கொண்ட முருகப்பெருமான் உருவாகினார்.

வதம் :

அதன் பிறகு தான் தோன்றிய காரணமான சூரபத்மனை அழிக்க தந்தை தாயின் ஆசியுடன் புறப்பட்டார். அந்த நிகழ்வு தான் சூரஹார நிகழ்வாக கொண்டாடப்டுகிறது. முதல் 5 நாள் சூரனின் மறு உருவமாக திகழ்ந்த சிங்க முகம்,   ஆட்டு உருவத்தில் அஜமுகி, யானை முகமுடைய தாரகன் ஆகியோரை வதம் செய்து விடுகிறார்.

சூரபத்மனுக்கு தூது : 

அதன் பிறகு தனது சேனைத்தளபதி வீரபாகுவை தூது அனுப்பி சூரபத்மன் திருந்துவதற்கு வாய்ப்பு தருகிறார். ஆனால் சூரன் அதனை மறுத்து முருகனுக்கு எதிராக போர் தொடுக்க தயாரானான். அதன் பிறகு தான் தாய் பார்வதி அம்பாள் அளித்த வேல் கொண்டு சூரனை வதம் செய்து , இரண்டாக பிளந்து ஒரு பகுதியை மயிலாகவும், ஒரு பகுதியை சேவல் (சேவல் கொடி) மாற்றி தன்னுடன் வைத்துக்கொண்டார்.

மயில்வாகனம் – சேவல் கொடி :

சூரனை வதம் செய்த முருகன், ஜெயந்திநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். முருகன் சூரனை வதம் செய்து அழிக்கவில்லை. சூரனை இரண்டாக பிளந்து தன்னுடன் வைத்து கொண்டார். அதனால் தான் முருகன் அனைவரையும் அரவணைக்கும் தெய்வமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

சூரனை வதம் செய்த பிறகு ஆலயத்தில் எழுந்தருளும் சண்முகநாதர் முன்பு கண்ணாடி வைத்து. கண்ணாடியில் தெரியும் முருகனுக்கு அபிஷேகம் செய்து சூரனை வதம் செய்த முருகன் குளிர்ச்சி அடைய வைப்பர். அதன் பிறகு வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.