#Breaking:மகிழ்ச்சி…தமிழகத்தில் மே 5 ஆம் தேதி கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகின்ற மே 6 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும்,இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மே 6 -க்கு பிறகு மேலும் தீவிரமடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதே சமயம்,தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர வெப்பநிலை தமிழகத்தில் தொடரும் எனவும் இந்திய வானிலை மையம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,தமிழகத்தில் கடலூர்,அரியலூர்,திருச்சி,புதுக்கோட்டை மற்றும் சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,தமிழகம்,புதுவை,காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,தமிழகத்தில் மே 5 ஆம் தேதி கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.அதன்படி,கிருஷ்ணகிரி, தருமபுரி,வேலூர்,திருப்பத்தூர்,சேலம்,திருவண்ணாமலை,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,அந்தமான் கடற்பகுதியில் மே 6 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும்,இதனால் மீனவர்கள்(மீன்பிடி தடைக்காலத்தை மீறி தவறுதலாக கூட)அந்தமான் கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,நாளை முதல் 25 நாட்களுக்கு அக்னி வெயில் கொளுத்த போகிறது.இந்த நிலையில், தமிழகத்தில் மழை பெய்யும் என்பது வெப்பத்தை சற்று தணிக்கும் என்று தெரிகிறது.