“ஐஎஸ்ஐஎஸ்” இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் “ஹமாஸ்” இயக்கம் ஒடுக்கப்படும் – இஸ்ரேல் பிரதமர் பேட்டி!

ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கம் ஒடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆவேசமாக கூறியுள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடுமையான யுத்தம் நடந்து வருகிறது. இஸ்ரேலியன் நகரங்களில் நுழைந்தும், காசா பகுதியில் இருந்து குண்டுகளை வீசியும் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேல் படையும், ஹமாஸ் அமைப்பினர் தங்கியிருக்கும் பதுங்கு குழி, சுரங்கபாதைகளை மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் இஸ்ரேலில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், நம் அனைவருக்கும் ஒன்று சொல்கிறேன். இன்னும் பல கடினமான நாட்கள் இருக்கும். ஆனால், தீமைக்கு எதிராக நாம் வெல்வோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. வெற்றிக்கான முதல் முன்நிபந்தனை – தார்மீகத் தெளிவு என்ன என்பதை நாம் புரிந்துகொள்வதே உண்மையாகும். தீமைக்கு எதிராக நாம் தலைநிமிர்ந்து, பெருமைப்பட்டு, ஒன்றுகூட வேண்டிய நேரம் இது.

ஹமாஸ் இயக்கம் ஒரு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் தான், இதனால் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் ஹமாஸ் இயக்கமும் ஒடுக்கப்படும். ஐஎஸ்ஐஎஸ்க்கு எதிராக நடத்தப்பட்ட விதத்திலேயே ஹமாஸ் அமைப்புக்கு எதிராகவும் நடத்தப்பட வேண்டும். சமூகத்திலிருந்து அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும். எந்தத் தலைவரும் அவர்களைச் சந்திக்கக் கூடாது, எந்த நாடும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது.

ஹமாஸ் தன்னை, நாகரீகத்தின் எதிரியாக காட்டியுள்ளது. வெளிப்புற இசை விழாவில் இளைஞர்களைக் கொன்று குவிப்பது, மொத்தக் குடும்பங்களையும் கொன்று குவிப்பது, பிள்ளைகள் முன்னிலையில் பெற்றோரைக் கொலை செய்வது, பெற்றோர் முன்னிலையில் குழந்தைகளைக் கொலை செய்வது, மக்களை உயிருடன் எரிப்பது, தலை துண்டிக்கப்படுவது, கடத்தல் ஈடுபடுவதை செய்து வருகிறது.

மேலும்,  பயங்கரங்களைக் கொண்டாடுவது, தீமையைக் கொண்டாடுவது மற்றும் மோசமான காட்சிகள் அரங்கேறி வருகிறது என குற்றசாட்டினார். மேலும், ஹமாஸின் காட்டுமிராண்டிகளுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் மற்றும் மக்களுக்கு அளித்த நம்பமுடியாத ஆதரவிற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கனை சந்தித்த பின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இவ்வாறு கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்