ஆளுநர் மாற்றம்? – பீட்டர் அல்போன்ஸ் கருத்து!

தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படுகிறாரா? அவ்வாறு நடந்தால் மத்திய அரசு எப்படி கலந்தாலோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹிட் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், தற்போது முதன் முதலாக தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார்.

இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் இல்லத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார். இதில் அவர் கொரோனா தொற்று குறித்த நடவடிக்கைகள், மேகதாது அணை போன்ற முக்கிய விஷயங்களை ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இதனை பற்றி, காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிரதமர்,உள்துறை அமைச்சர சந்திப்பது ஆளுநர்மாற்றம் பற்றிய யூகங்களை எழுப்பியுள்ளது. அது உண்மையானால் புதிய ஆளுநர் நியமனம் பற்றி பிரதமரும் உள்துறை அமைச்சரும் முதலமைச்சரிடம் ஆலோசித்த பின்பே நியமனம் செய்யவேண்டும். அதுதான் கூட்டாட்சி தத்துவம்!” என தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் தமிழகத்தில் பாஜக தலைவராக அண்ணாமலை மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.