மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை எழுதாதது இதுவே முதல் முறை என பாமக தலைவர் ட்வீட்.
பொதுத்தேர்வு:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 3,185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
மாணவர்கள் ஆப்சென்ட்:
பொதுத்தேர்வை தமிழகத்தில் 8.36 லட்சம் மாணவர்களும், புதுச்சேரியில் 14,710 மாணவர்கள் எழுதுகின்றனர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நேற்று 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வில் 50,674 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
பாமக தலைவர் ட்வீட்:
பள்ளி தேர்வர்கள் 49,559 பேரும், தனி தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வு எழுதவில்லை என கூறப்பட்டது. இந்த நிலையில், பொதுத்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தந்தது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இதுவே முதல் முறை:
மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை எழுதாதது இதுவே முதல் முறை. இது அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதாதது, தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படாதது போன்றவற்றால் ஏற்பட்ட அச்சம் ஆகியவை தான் பெரும்பான்மையான 12-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தேர்வையே எழுதாததற்கு காரணம் என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உளவியல் கலந்தாய்வு:
அச்சம் காரணமாக அடுத்து வரும் தேர்வுகளையும் இந்த மாணவர்கள் எழுதாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்தப் போக்கிற்கு முடிவு கட்ட தமிழக அரசின் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழிப்பாடத்தாள் தேர்வை எழுதாத மாணவர்களின் பட்டியலை வட்ட அளவில் தயாரித்து, அந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் அடுத்து வரும் தேர்வுகளை தவறாமல் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.