IPL 2024: இரண்டு முறை சாம்பியனாக்கிய அணிக்கு திரும்பிய கெளதம் கம்பீர்..!

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2024 சீசனில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது முன்னாள் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்பவுள்ளார். கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி 2 முறை ஐபிஎல் சாம்பியன் ஆனது.

கொல்கத்தா அணியில் இணைந்த கம்பீர்:

கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் புதிதாக வந்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு கம்பீர் ஆலோசகராக பணியாற்றினார். கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த கம்பீரின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், தற்போது கொல்கத்தா அணிக்கு கம்பீர் ஆலோசகராக இணைந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக தனக்கு ஒத்துழைப்பு அளித்த லக்னோ அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு தனது சமூக வலைதளம் மூலம் கம்பீர் நன்றி தெரிவித்தார்.

இரண்டு முறை சாம்பியன்: 

2011 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் கவுதம் கம்பீர் சேர்ந்தார். 2017 வரை கொல்கத்தா அணிகாக விளையாடி வந்தார். இந்த காலகட்டத்தில் கொல்கத்தா அணியை  ஐந்து முறை பிளேஆஃப் க்கு கொண்டு சென்றார். அதே நேரத்தில் 2012 மற்றும் 2014 இல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார். 2008 முதல் 2018 வரை கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். ஐபிஎல்லில் 154 போட்டிகளில் விளையாடிய கவுதம் கம்பீர் 4217 ரன்கள் குவித்தார். அதில் 36 அரை சதம் அடித்துள்ளார்.

author avatar
murugan