இந்த செமஸ்டர் தேர்வில் கட்டணம் உயர்த்தப்படாது.. அமைச்சர் பொன்முடி கொடுத்த விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுகளுக்கு ஒரு தாளுக்கான தேர்வுக்கட்டணம் ரூ.150-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.225-ஆகவும்,இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300-ஆக இருந்த தேர்வுக்கட்டணம் தற்போது ரூ.450-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு செய்முறைக்கு ரூ.450-ஆக இருந்த தேர்வு கட்டணம் ரூ.650-ஆகவும், ஆய்வு கட்டுரை (ஒரு தாளுக்கு) சமர்ப்பிப்புக்கு ரூ.600-ஆக இருந்த கட்டணம் ரூ.900-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1,000 லிருந்து ரூ.1,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம் உயர்வால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் சுமார் ரூ.2050 கட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மறுபக்கம், அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்கள் கடும் அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு! முழு விவரம்..

அந்தவகையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை பாதிக்கும் தேர்வுக் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்வுஉயர்த்தப்படுவதாக  அறிவிப்பு வெளியான நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 50% கட்டண உயர்வு, இந்த செமஸ்டர் தேர்வுகளுக்கு பொருந்தாது. அனைத்து துணை வேந்தர்களிடமும் கலந்தாலோசித்து அடுத்தாண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே கட்டண முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், தகுதியில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 56 பேர் நீக்கம், 92 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்