உலகையே அச்சுறுத்தும் ஒமிக்ரான்;இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் தொற்று ஆந்திராவில் ஒருவருக்கும்,சண்டிகரில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதன்மூலம்,தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

ஆனால்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து,இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.அதன்படி,மகாராஷ்டிரா 17 பேருக்கும், ராஜஸ்தானில் 9 பேருக்கும், டெல்லியில் 2 பேருக்கும், குஜராத்தில் 3 பேருக்கும், கர்நாடகாவில் 2 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,தற்போது ஆந்திராவிலும் முதல் முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆந்திரா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

“34 வயதான வெளிநாட்டுப் பயணி ஒருவர் அயர்லாந்தில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்து, சோதனை செய்ததில்,கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனையில் நெகட்டிவ் என கண்டறியப்பட்டது. அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு 27.11.2021 அன்று விசாகப்பட்டினம் வந்தார்.

அதன்பின்னர்,விஜயநகரத்தில் மீண்டும் சோதனை நடத்தியதில், RTPCR சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவரது மாதிரி ஜீனோம் சீக்வென்சிங்கிற்காக ஹைதராபாத்தில் உள்ள CCMB க்கு அனுப்பப்பட்டது மற்றும் முடிவு ஒமிக்ரான் பாசிட்டிவ் என அறிவிக்கப்பட்டது.இது ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட முதல் ஒமிக்ரான் வழக்கு. ஆனால்,அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை மற்றும் 11.12.2021 அன்று மீண்டும் சோதனை செய்யப்பட்டார், மேலும் RT-PCR முடிவு கொரோனாவுக்கு எதிர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதுவரை மொத்தம் 15 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா RTPCR பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது.மேலும் அனைத்து 15 மாதிரிகளும் மரபணு வரிசைப்படுத்தலுக்காக CCMB க்கு அனுப்பப்பட்டன. முழு மரபணு வரிசைமுறை அறிக்கைகள் 10 வழக்குகளில் பெறப்பட்டன, அவற்றில் ஒன்று மட்டுமே ஒமிக்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்பி கவலைப்பட வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், முகமூடி அணிதல், கைகளை தவறாமல் கழுவுதல் போன்றவற்றை பின்பற்றவும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,சண்டிகரிலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதன்மூலம்,இந்தியாவில் ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 35 ஆக உயர்ந்துள்ளது.