இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் இருந்து 3.4 லட்சம் பேர் வெளியேற்றம்.! ஐ.நா அறிவிப்பு.!

கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் தீவிரமடைந்து உள்ளது. இதுவரை இந்த தாக்குதலில் இஸ்ரேல் – பாலஸ்தீனியம் என இரு நாட்டை சேர்ந்த மக்கள் சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகிறது. காஸாவில் , ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக கருதி பல்வேறு கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் மூலம் தகர்த்து வருகிறது.

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கிருக்கும் பாலஸ்தீனிய மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். காஸா பகுதியில் இருக்கும் 5 நகரங்களில் மொத்தமாக சுமார் 20 லட்சம் பேர் வசித்து வந்தனர்.

இங்கு தாக்குதல் அதிகமாக நடைபெறும் பகுதியில் இருந்து பாலஸ்தீனிய மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நேற்று ஐநா மனித வள அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில், இதுவரை சுமார் 3,40,000 பாலஸ்தீனிய மக்கள் காஸா பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், காசாவில் தற்போது பாதுகாப்பான இடம் என்று ஒரு சென்டிமீட்டர் பரப்பளவு கூட இல்லை. காஸாவில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் ஐ.நா ஏற்படுத்திய எல்லை பகுதி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது நாம் பார்ப்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்தப் போரின் மூலம் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மிகவும் பெரியது.  இதற்கு முன்னர் இவ்வாறு நடந்தது இல்லை என்பது போல தெரிகிறது.

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காஸா பகுதியில் பொதுச் சேவைகள் நிறுத்தப்பட்டு, முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது.  அங்கு கழிவுநீர் வெளியேற்றம் கூட தோல்வி அடைந்துள்ளது. இது ஒரு பேரழிவு என்று ஐநா மனித வள அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நேரத்தில், காஸா பகுதி தாக்குதல் பற்றி எதுவும் கூறாமல், நடவடிக்கை எடுக்காமல் கடந்து சென்றால் அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் ஐநா மனிதவள அதிகாரி கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.