ஈரோடு, நீலகிரியை தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்தது கரூர்.!

கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று சிகிச்சையிலிருந்து பூரண குணமடைந்த கடைசி நபரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழியனுப்பி வைத்தார்.
கொரோனா தொற்று காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் கொரோனா சிகிச்சை பெற்று வந்தனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்கனவே 41 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தற்போது, கடைசி நபரும் பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 குணமடைந்த நபரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மருத்துவமனையில் இருந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். மேலும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  முதல்வர் ரோஸி வெண்ணிலா தலைமையிலான மருத்துவ குழுவிற்கும், தூய்மை பணியாளர்களுக்கும் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சருடன், கரூர் மாவட்ட ஆட்சியர்  அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாண்டியராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் மாவட்டமானது நீலகிரி, ஈரோடை போலவே கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ளது.
தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 6 நபர்களும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 நபர்களும் கொரோனா சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.