கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கம் -அதிமுக தலைமை உத்தரவு

அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன் ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட  சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.இதனால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேவனஹல்லி அருகே ஒரு பண்ணை வீட்டிற்கு சசிகலா சென்றார். பண்ணை வீட்டில் சசிகலா ஓய்வு எடுத்து வருகிறார்.பின்பு வரும்  வரும் 7-ஆம் தேதி சசிகலா தமிழகம் திரும்புகிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையில் தான் சசிகலா விடுதலையை தொடர்ந்து அதிமுகவை சார்ந்த சிலரும் போஸ்டர் ஒட்டி வரவேற்று வருகின்றனர்.சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் அல்லது பேனர் வைத்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில் அதிமுக கர்நாடக மாநில செயலாளராக பதவி வகித்து வந்த யுவராஜ் சசிகலாவை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார்.கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .