விபிஎப் கட்டணம் செலுத்தி படங்கள் திரையிடபடாது என்பதில் உறுதி – பாரதிராஜா.!

விபிஎப் கட்டணம் செலுத்தி படங்கள் திரையிடபடாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் , விரைவில் அதற்கான தீர்வை எட்டுவது உறுதி என்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் செயல்பட தொடங்கியுள்ளது . இதனிடையே புது படங்கள் ரீலீஸ் செய்யப்பட மாட்டாது என்றும் , விபிஎப் கட்டணம் ரத்து செய்யாமல் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா கூறியிருந்தார் . இந்த நிலையில் இன்று கியூப் நிறுவனம் இந்த மாதம் முழுவதும் திரையிடப்படும் புது திரைப்படங்களுக்கு விபிஎப் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது . அதன்படி புது படங்கள் ரீலீஸ் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது .

இது தொடர்பாக இயக்குநரும், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்குதான்.  திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்களின் நலனுக்குத்தான். VPF சம்பந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று VPF-ஐ தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்திருக்கிறது. நல்லது

திரையரங்குகளுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவிவரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ, திரையரங்கங்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPF-ஐ விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி VPF கட்டணமில்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளோம்.

அதேசமயம் VPF கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.  விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். இதிலும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கும் , தயாரிப்பாளர் சங்கத்திற்கு இடையேயான பிரச்சினை விபிஎப் கட்டணம் முழுவதுமாக ரத்து செய்யும் வரை தொடரும் என்று தெரிகிறது.