இங்கிலாந்து அணி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை – பென் ஸ்டோக்ஸ்

நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், இன்னும் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாக் அவுட் போட்டிகள் நாளை தொடங்குகிறது.

முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை சிட்னியில் மோதுகின்றன. நவ-10 இல் அடிலெய்டில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியை முன்னிட்டு இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது, இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணி பலமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இங்கிலாந்து அணி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை இருந்தும் நாங்கள் அரையிறுதிக்குள் இருக்கிறோம்.

ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் எங்களது ஆட்டத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், பயிற்சியில் திரும்ப திரும்ப அதே முறையைத்தான் செய்து வருகிறோம், போட்டியில் வெல்வதற்கு என்ன தேவையோ அதை செய்வோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அடிலெய்டு மைதானம் மற்ற மைதானங்களை காட்டிலும் அளவுகளில் சற்று வித்தியாசமானது, நீளமான பௌண்டரி, இது எங்களுக்கு சவாலாக இருக்கும், அந்த சவாலை எங்களுக்கு சாதகமாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்வோம். நாக் அவுட் மாதிரியான பெரிய போட்டிகளில் இருக்கும் அழுத்தத்தை சமாளிக்க நான் அவ்வப்போது ஸ்கோர் போர்டை பார்த்து நிலைமையை தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ள முயற்சிப்பேன்.

இந்தியா போன்ற வலிமையான அணியை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம், எதிரணி குறித்து பெரிதாக நாங்கள் யோசிக்க மாட்டோம், எங்கள் அணி பற்றி தான் அதிகம் யோசிப்போம். இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டி குறித்து எல்லாரும் பெரிதாக பேசுகிறார்கள், அது சிறப்பான ஒன்றுதான் இருந்தாலும் உண்மையை சொல்லவேண்டுமானால் நாங்கள் இங்கு உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறோம், மற்றதெல்லாம் எனக்கு தெரியாது என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

டேவிட் மலான், உடல்நிலை குறித்து தற்போது எந்த தகவலும் என்னிடம் இல்லை. அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை இங்கிலாந்து அணி அடிலெய்டில் இந்தியாவை சந்திக்கிறது. நாக் அவுட் போட்டிகளில் 2013 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதுகிறது.

கடைசியாக 2013 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
Muthu Kumar

Leave a Comment