ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகளும், மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு இடையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கடைகளில்  கொரோனா நிவாரண உதவித்தொகை ₹1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்பட வேண்டும்.எனவே அனைத்து நியாய விலை கடைகளுக்கான வாராந்திர விடுமுறை நாளான ஏப்ரல் 3-ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்  என்றும்  இதற்கான விடுமுறை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .
இதற்கு இடையில்   சென்னை  பல்லாவரம் சரகத்தில் உள்ள பணியாளர்கள்  கூட்டுறவு இணை பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில்,தமிழக அரசு ஊரடங்கு  உத்தரவை  அமல்படுத்தியதால் பொது போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. அரசு  தடை உத்தரவை திரும்ப பெறும்வரை, பணிக்கு வர முடியாத நிலையில் உள்ளோம்.எனவே  அதுவரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து எங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .அதில்,கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிபுரியும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு ரூ.2500, உதவியாளர்களுக்கு ரூ.2000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.