இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

CPI : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வெளியிட்டார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அவ்வப்போது மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதிகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சிபிஎம் கட்சி தேர்தலை அறிக்கையை வெளியிட்ட நிலையில், தற்போது சிபிஐ கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, தலைநகர் டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வெளியிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாக்குறுதிகள்:

  • குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலி ரூ.700 ஆக உயர்த்தவும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தவும் பாடுபடுவோம்.
  • கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் ஆளுநர் பதவி நீக்குவதற்கு போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
  • புதிய கல்விக்கொள்கை ரத்து.
  • பாஜகவின் வணிகமயமான, மதரீதியிலான கல்வித் திட்டங்கள் திரும்பப் பெறப்படும்.
  • நிதி ஆயோக் கலைத்து விட்டு, திட்டக்குழு மீண்டும் ஏற்படுத்தப்படும்.
  • சுகாதாரம், கல்விக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மக்கள்தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  • நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றில், மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.
  • ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துடன் கூடிய மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
  • புதுச்சேரி மற்றும் டெல்லிக்கு தனி அந்தஸ்து.
  • PM கேர்ஸ் நிதி விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும்.
  • சமூகநலன் மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும்.
  • அக்னிபாத் திட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை உனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பழைய ஓய்வூதியம் திட்டம் மீண்டும் கொண்டுவர பாடுபடுவோம்.
  • நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம் இயற்றப்படும்.
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்