ஈஸ்டர் திருநாளும் அதன் சிறப்புகளும்..!

ஈஸ்டர்  -ஈஸ்டர் பண்டிகையின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

ஈஸ்டர் பண்டிகை :

இந்த ஆண்டிற்கான ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31ஆம் தேதி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கொண்டாடப்பட உள்ளது.ஈஸ்டர் பண்டிகை என்பது இயேசு உயிர்த்தெழுந்த நாளாகும். புனித வெள்ளி அன்று இயேசு மறிக்கப்பட்டு மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. இன் நாள்  உயிர்ப்பு ஞாயிறு என்றும் கூறப்படுகிறது.

ஈஸ்டர் பண்டிகையின் சிறப்பு:

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஈஸ்டர் தேதி மட்டும் ஏன் மாறி மாறி வருகிறது தெரியுமா?..
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலையாகி வெளியேறியது ஆபிப்  மாதம் 14ஆம் தேதி ,அன்று இரவு ஒரு பௌர்ணமி தினமாகும்.

ஆபிப்  மாதம் என்பது மார்ச்- ஏப்ரல் மாதத்தை குறிக்கிறது. இது வசந்த காலத்தின்  ஆரம்ப காலமாகும். ஆரம்ப காலகட்டத்தில் யூதர்கள் ஆபிப்  மாதம் 14ஆம் தேதியை ஈஸ்டர் பண்டிகையாக  கொண்டாடினார்கள் .ஆனால் புறஜாதி விசுவாசிகள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்கள்.

கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஈஸ்டர்  பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கிபி 325 இல் தீர்மானம் போடப்பட்டது .அதன்படி மார்ச் 21ஆம் தேதிக்கு பிறகு வரும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை என கணக்கிடப்படுகிறது.

இதன்படி தான் ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் கணக்கிடப்படுகிறது.மார்ச் 21 அன்று இரவும் பகலும் சமமாக  இருக்கும் என்பது குறிப்படத்தக்கது .

ஈஸ்டர் பண்டிகையின் வரலாறு:

இயேசு நம் பாவங்களுக்காக மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் . கிறிஸ்துவத்தின் முதுகெலும்பும் அடிப்படை சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் தான் இருக்கிறது.

கிறிஸ்து உயிர்த்தெழுந்த  பிறகு அவர் 40 நாட்கள் இவ்வுலகில் தங்கி இருந்து தம்முடைய அப்போஸ்தலர்களுக்கும் அவரைப் பின்பற்றிய அனைவருக்கும் காட்சியளித்து பேசினார் என்று வேதாகமத்தில் கூறப்படுகிறது.

இயேசு உயிர்த்தெழுந்ததால் தான் நமக்கு பாவ மன்னிப்பு கிடைக்கிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலம் நாமும் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கை கிடைக்கிறது.  இயேசு கிறிஸ்து நமக்காக பட்ட பாடுகளை நினைவில் கொண்டு அவர் சாயலில் நாமும்  வாழ்வோம்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.