#BREAKING: தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மின்தடை இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த நிலையில் அதன் தொற்று பரவல் சங்கிலியை உடைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். இந்த சூழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் 07.06.2021 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது, பொது மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருப்பதாலும், அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்-லைன் வகுப்புகள்/தேர்வுகள் நடப்பதாலும், தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் பராமரிப்பு பணிகளுக்காக கொடுக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2020 முதல் ஆறுமாத காலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது. தற்பொழுது மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், பராமரிப்பு பணிகள் எவ்வித தொய்வின்றி விரைந்து எடுத்துக் கொள்ளப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V.செந்தில்பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.