டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது – டாஸ்மாக் நிர்வாகம்

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது  டாஸ்மாக் நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக்கூடாது என்றும், வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி விலைப்பட்டியல் இருக்க வேண்டும் என்றும், வாடிக்கையாளர்கள் வாங்கும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்கள் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் போது மொத்தமாக விற்பனை (Bulk Sales) செய்தல் கூடாது என்றும், ஒரு தனி நபருக்கு அனுமதிக்கப்பட்ட அளவுகளிலேயே விற்பனை செய்ய வேண்டுமென பார்வையில் குறிப்பிட்டுள்ள இவ்வலுவலக கடிதத்தின் மூலம் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளளது. மேலும், முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களின் ஆய்வுக் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மேற்காணும் பொருள் குறித்து, மாண்பமை செள்ளை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) மதுபான சில்லறை விற்பனை கடைகளிலிருந்து மொத்தமாக மதுபானங்களை (Bulk Sales) வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்களுக்கு மொத்தமாக விற்பனை (Bulk Sales) செய்யும் டாஸ்மாக் மதுபான விற்பனையாளர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

எனவே, அனைத்து மாவட்ட மேலாளர்களும், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலிருந்து மதுபானங்களை மொத்தமாக விற்பனை (Bulk Sales) செய்தல் கூடாது. என்பதை தத்தம் மாவட்ட கடைப்பணியாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடத்தி, இப்பொருள் குறித்து விளக்கமாக தெரிவித்து அனைத்து கடைப் பணியாளர்களிடமும் சான்றொப்பம் பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அவ்வாறு மொத்தமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்மந்தப்ட்ட கடைப்பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது

இப்பொருள் குறித்து மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்திருப்பதால் இதனை அனைத்து மாவட்ட மேலாளர்களும் தவறாது கண்காணித்து எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வண்ணம் விற்பனை செய்திட அனைத்து கடைப் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இதனை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கண்ட சுற்றறிக்கை கிடைக்கப் பெற்றமைக்கான ஒப்புதலை இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.