திண்டுக்கல் அருகே காட்டெருமைகளின் உடல்கள் கண்டெடுப்பு !இருவர் கைது …

கொடைக்கானல் அருகேயுள்ள செம்பரான்குளம் பகுதியில் தனியார் தோட்டத்தில் காட்டெருமைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில், உதவி வனபாதுகாவலர் பாலகிருஷ்ணன், வனச்சரகர் கருப்பையா, தாசில்தார் பாஸ்யம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த தோட்டத்தில் சந்தேகப்படும்படியான இடங்களை வனஊழியர்கள் தோண்டினர்.

அங்கு 3 காட்டெருமைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவற்றின் உடல்கள் எலும்பு கூடாக மாறி இருந்தது. இதைத் தொடர்ந்து கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் ஹக்கீம், டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள், அவற்றை பரிசோதனை செய்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

செம்பரான்குளம் பகுதியில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சத்தியசீலன் என்பவருடைய தோட்டத்தில் காட்டெருமைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று சோதனை நடத்தினோம். 3 காட்டெருமைகளின் தலைகள், உடல் பாகங்கள் எலும்புகள் புதைக்கப்பட்டு இருந்ததை தோண்டி எடுத்துள்ளோம்.

இதுதொடர்பாக அந்த தோட்டத்தின் மேற்பார்வையாளராக இருந்த கே.சி.பட்டியை சேர்ந்த கதிரேசன் (வயது 40), தஞ்சாவூர் மாவட்டம், கோவிலூரை சேர்ந்த சிவலிங்கம் (60) ஆகியோரை கைது செய்துள்ளோம். மேலும் பலரை தேடி வருகிறோம். இந்த காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து தோட்டத்திற்குள் புகுந்த போது மின்வேலியில் சிக்கி பலியானதா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனியார் தோட்டத்தில் புதைக்கப்பட்டு இருந்த 3 காட்டெருமைகளின் உடல் தோண்டி எடுத்த சம்பவத்தால் கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment