டெல்லி விவசாயிகள் போராட்டம்.. பேச்சுவார்த்தையில் முக்கிய 3 கோரிக்கைகள்.! 

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார திருத்த சட்டம் 2020ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் – அமித் ஷா டெல்லியில் அவசர ஆலோசனை!

குறிப்பாக பஞ்சாப் , ஹரியானா உள்ளிட்ட வடமாநில விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் டெல்லியினை நோக்கி “டெல்லி சலோ” எனும் பெயரில் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் டெல்லி மாநில எல்லைகளை பாதுகாப்பு படையினர் முழுவதுமாக மூடியுள்ளனர்.

மேலும், தடுப்புகளை மீறி எல்லை பகுதிகளுக்கு வரும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு தாக்குதலும் நடத்தப்படுகிறது. இதனால் டெல்லி , பஞ்சாப், ஹரியானா எல்லை பகுதிகளில் கடும் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில் டெல்லி விவசாய அமைப்புகளுடன் மத்திய அமைச்சர்கள் முன்னர் 3 முறை பேச்சுவார்த்தை  நடத்தினர். ஆனால் அதில் முடிவு எதுவும் எட்டப்படாததால் இன்னும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இதனை அடுத்து 4 முறையாக நாளை (ஞாயிற்று கிழமை) மீண்டும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் சண்டிகரில், அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்த ராய் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஆனால் இந்த பேச்சுவார்தையில் விவசாய அமைப்புகள் 3 கோரிக்கைகளை மட்டுமே எழுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும், அந்த ஆதார விலையானது விவசாய விளைபொருட்கள் விளைவிக்க ஆகும் செலவுடன் +50 சதவீதம் கூடுதலாக இருக்கும்படியாக நிர்ணயம் செய்ய வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை தான் விவசாயிகள் நாளை மத்திய அமைச்சர்களிடம்  கூற உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றிய உறுதியான தகவல்கள் நாளைய நாள் பேச்சுவார்த்தையில் தெரியவரும்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment