டெல்லி கலால் கொள்கை வழக்கு.! மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!

தேசிய தலைநகரான டெல்லியில் புதிய மதுபான கொள்கை சம்பந்தமாக அரசுக்கு பலகோடி ரூபாய் நிதி இழப்பீடு ஏற்பட்டதாகவும், சட்டவிரோத பணபரிவார்த்தனை நடைபெற்றதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை, கடந்த பிப்ரவரி 26ம் தேதி 8 மணி நேர விசாரணைக்கு சிபிஐ கைது செய்தது.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அவர், மார்ச் 9ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார். ஆனால், மணீஷ் சிசோடியா சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்பதால் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

தொடர்ந்து மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த பொதும், ஒவ்வொரு முறையும் அவரது ஜாமீன் மனு ரத்து செய்யப்ப்பட்டதோடு, அவரது நீதிமன்ற காவல் மட்டுமே நீடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (இடி) ஆகிய இரண்டும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.

இதன்பிறகு தனது ஜாமீன் மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது, வழக்கு விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்று நீதிபதிகள் கேட்டனர்.  அமலாக்க இயக்குனரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு 9 முதல் 12 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கலாம் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து மதுபான கொள்கை விதிமீறல் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதோடு, இந்த வழக்கின் விசாரணையை 6 முதல் 8 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டது. இந்த 6 மாதங்களில் விசாரணை மெதுவாக நடந்தால், சிசோடியா மீண்டும் ஜாமீன் கோரி பிற்காலத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.