#IPL2022: பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்த சென்னை.. 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்தது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 49-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – கான்வே களமிறங்கினார்கள்.

அதிரடியாக ஆடிய ருதுராஜ் 28 ரன்கள் அடித்து வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய ராபின் உத்தப்பா 1 ரன் மட்டுமே அடித்து வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய அம்பதி ராயுடு 10 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த கான்வே, 56 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜடேஜா 3 ரன்கள் அடித்து வெளியேற, சிறப்பாக ஆடிவந்த மொயின் அலி 34 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டையும் இழந்தார்.

அவரைதொடர்ந்து களமிறங்கிய தோனி, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் சென்னை அணி, தனது பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்தது. மேலும் பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்திற்கு முன்னேறியது.