குழந்தைகளுக்கான கோவோவேக்ஸ் தடுப்பூசி – பரிசோதிக்க தன்னார்வலர்களை நியமிப்பது தொடக்கம்!

நாடு முழுவதும் 10 நகரங்களில் நடக்க உள்ள இந்த சோதனையில் 920 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான 2 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியின் இரண்டாவது, மூன்றாவது கட்டம் மருத்துவ பரிசோதனையில் தன்னார்வலர்களை நியமிப்பது நேற்று டெல்லி ஹம்டார்ட் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கியது.

அமெரிக்காவில் நோவோவேக்ஸ் நிறுவனம், குழந்தைகளுக்கான தடுப்பூசியை நோவோவேக்ஸ் என்ற பெயரில் உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோவோவேக்ஸ் என்ற பெயரில் தயாரித்து வழங்குவதற்கு புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்துடன் நோவோவேக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த சோதனை இந்தியாவில் கிட்டத்தட்ட 10 நகரங்களில் நடத்தப்படும் என்றும் 920 குழந்தைகளில் 12 முதல் 17 வயது வரை உள்ள 420 பேரும், 2 முதல் 11 வயது வரை உள்ள 420 பேரும் அடங்குவர். கோவோவேக்ஸ் தடுப்பூசியின் 2/3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கு இந்திய சீரம் நிறுவனத்துக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குனர் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார்.

கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் எச்சரிக்கை விடுத்த நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசியை கொண்டுவருவதில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட Zydus Cadila நிறுவனத்தின் ZyCoV-D கொரோனா தடுப்பூசிக்கு மருந்து கட்டுப்பாட்டாளரிடமிருந்து அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இதுவே நாட்டில் 12-18 வயதினருக்கு பயன்பாட்டுக்கு வருகிற முதல் கொரோனா தடுப்பூசியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்