8 ஆண்டுகள் நேர்மையாக பணியாற்றிய என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் என்று ராஜினாமா கடிதத்தில் சிசோடியா உருக்கம்.
மணிஷ் சிசோடியா ராஜினாமா:
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா சிபிஐயால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கைதாகியுள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மணிஷ் சிசோடியாவின் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் வருத்தம்.
இந்த நிலையில், மணிஷ் சிசோடியா ராஜினாமா கடிதத்தில், எட்டு ஆண்டுகளாக நேர்மையுடனும், உண்மையுடனும் தொடர்ந்து பணியாற்றிய என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது வருத்தமளிக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பது எனக்கும் எனது கடவுளுக்கும் தெரியும். இது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியலைக் கண்டு பயப்படும் கோழைத்தனமான மற்றும் பலவீனமானவர்களின் சதியே தவிர வேறில்லை.
கெஜ்ரிவால் தான் இலக்கு:
நான் அவர்களின் இலக்கு அல்ல, நீங்கள் [கெஜ்ரிவால்] அவர்களின் இலக்கு. ஏனென்றால், இன்று டெல்லி மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் உங்களை நாட்டிற்கான தொலைநோக்குப் பார்வையும், அதைச் செயல்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் திறனும் கொண்ட தலைவராகப் பார்க்கிறார்கள். பொருளாதார நெருக்கடி, வறுமை, வேலையின்மை, பணவீக்கம் மற்றும் ஊழல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நாட்டு மக்களின் பார்வையில் நம்பிக்கையின் பெயராக மாறியுள்ளார் என கூறியுள்ளார்.