சென்னையில் கொரோனா பீதி காரணமாக இரண்டு நாட்களில் 3.70 இலட்சம் மக்கள் சொந்த ஊருக்கு பயணம்… அலை மோதும் மக்கள் கூட்டம்…

தமிழகத்தில், கொரோனா நோய் தொற்றின்பரவல் மற்றும்  தாக்கத்தை தடுக்கும் வகையில், நேற்று மாலை, 6:00 மணி முதல், 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், மக்கள் கூடுவதை படிப்படியாக குறைக்கும் நோக்கில், நேற்று முன்தினம்,சென்னை  மெட்ரோ ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன; குறைந்த அளவில், மின்சார ரயில்கள் மட்டும்  இயக்கப்பட்டன. இதனால், குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்ட, அரசு பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் போக்குவரத்து மட்டுமின்றி, தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. இதனால், ஏராளமானோர் பேருந்து நிலையங்களில் கூடினர். இந்த மக்கள்  கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், அரசு திணறியது.மேலும், சென்னையில் போதுமான விரைவு பஸ்கள் இல்லாததால், சென்னை மாநகர பஸ்களை இயக்கவும், தனியார் பஸ்களை இயக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது. அதன்படி,

  • கும்பகோணம், விழுப்புரம் உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் இருந்து, 2,450 பஸ்களும்,
  • மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், 400 பஸ்களும் என, 2,850 பஸ்கள் இயக்கப்பட்டன.
  • இவற்றில், 1.90 லட்சம் பேர் பயணித்தனர்.
  • தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட, 430 அரசு பஸ்களில்,
  • 29 ஆயிரம் பேர் பயணித்தனர்.

இதுமட்டுமின்றி, தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள், வேன்கள், கார்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களிலும், 2 லட்சம் பேர் பயணித்தனர். அதேபோல, நேற்று மதியம், 12:00 மணி வரை இயக்கப்பட்ட, அரசு பஸ்களில், 1 லட்சம் பேரும், தனியார் வாகனங்களில், 50 ஆயிரம் பேருக்கு மேல் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இந்த வகையில், இரண்டு நாட்களில், சென்னையில் இருந்து மட்டும், 3.70 லட்சம் பேர், தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர், சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

author avatar
Kaliraj