தீவன தட்டுப்பாடு பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்-அச்சத்தில் விவசாயிகள் சங்கம்

கால்நடை தீவன தட்டுப்பாட்டால் நகரங்களில் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.

கால்நடை தீவனங்கள் குறித்து அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கா தவறினால், தடையுத்தரவு காலத்தில் நகர பகுதிகளுக்கு பால் தட்டுப்பாடு அதிகரிக்கும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர்  அச்சம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறுகையில் தருமபுரி ஆவின் ஒன்றியத்தில் சராசரியாக  1.5 லட்சம் லிட்டர் பால் நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் கோடையில் தீவன பற்றாக்குறை ஏற்படும் அத்தகைய ஓரிரு மாதங்கள் இயல்பாகவே பால் வரத்து ஆனது பாதிக்கும். அத்தகைய காலங்களில் விவசாயிகள் தவிடு, புண்ணாக்கு, குச்சி தீவனம் ஆகியவற்றை கால்நடைகளுக்கு கூடுதல் ஊக்கமாக கொடுப்பர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் அரசு பிறப்பித்துள்ள 144 தடையுத்தரவு அமலில் இருப்பதால் தவிடு உள்ளிட்ட கால்நடை தீவனங்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுவது மட்டுமன்றி போலீஸ் நெருக்கடியும்  ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை காலமாக இருக்கிறது. இந்த காலத்தில் இயல்பாகவே குறையும் பால் உற்பத்தி தற்போது ஏற்பட்டுள்ள தீவன தட்டுப்பாட்டால் இது மேலும் குறைந்து விடும். கடந்த சில நாட்களாக தருமபுரி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் மட்டுமே  கொள்முதல் செய்யப்படுகீறது தடையுத்தரவால் வீடுகளிலேயே அனைவரும் இருந்து வரும் சூழ்நிலையில் நகரங்களில் பாலுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேநேரம், பால் உற்பத்தியானது  படிப்படியாகக் குறைந்து வருகிறது.இவ்வாறு  இன்னும் 15 நாட்களுக்கும் மேலாக தடை அமலில் இருக்கும் என்று தெரிகிறது. எனவே, தவிடு, புண்ணாக்கு, குச்சி தீவனம் போன்ற கால்நடை தீவனங்களை, அவற்றின் உற்பத்தி பகுதிகளில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி எடுத்துச் செல்லவும், மேலும் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க  அரசு வழிவகைச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர்களிலும் விவசாயிகள் இவ்வகை தீவனங்களை வாங்கிச் செல்ல போலீஸார் அனுமதிக்க வேண்டும். உரிய நேரத்தில் அரசு போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மீதமுள்ள தடை காலத்தில் நகரங்களில் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச்சத்தோடு எச்சரிக்கை  தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha