இந்தியாவில் ஒரே நாளில் 47% அதிகரித்த கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. தொற்று பரவும் வீதம் 47% ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் பரவும் வீதமும், உயிரிழப்போர் வீதமும் அதிகரித்து மக்களை அச்சத்தில் வைத்திருந்தது. தற்போது இதன் தொற்று பாதிப்பு குறைந்து வந்துகொண்டு இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு பின்னர் திங்கள் கிழமையன்று இதன் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தது.

இந்நிலையில் திடீரென்று ஒரே நாளில் தொற்று வேகமாக அதிகரித்துள்ளது. செவ்வாய் கிழமையன்று கொரோனா பாதிப்பு 43,654 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. மேலும், 640 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா பாதிப்புகளில் பாதிக்கும் அதிகமான தொற்று எண்ணிக்கை கேரள மாநிலத்தை சேர்ந்தது.

கேரளாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கட்டுக்குள் வராத காரணத்தால் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 22,129 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் 22 மாவட்டங்களில் தொற்று அதிகமாக பரவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 7 மாவட்டங்கள் கேரளாவை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால் தெரிவித்துள்ளதாவது அனைவரும் கவனமாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கொரோனா தொற்றின் பரவும் வீதம் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கையை குறைப்பதற்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.