கொரோனா அதிகரிப்பு… மீண்டும் மாஸ்க் கட்டாயம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு.

நாட்டில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சில மாநிலங்களில் கொரோனா தொற்றின் பரவல் மீண்டும் படிப்படியாக சற்று அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் சில கட்டுப்பாடுகளை விதித்து, முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

டெல்லி, உத்ரபிரேதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த சமயத்தில், நேற்று கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதில், தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டார்.

மேலும், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை பெற்ற வெற்றிகளை இழக்காமல், நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது என கூறினார். இந்த நிலையில், கொரோனா அதிகரிப்பால் மகாராஷ்டிராவில் மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யவும், விரைந்து கொரோனா தடுப்பூசிகளை செலுத்தவும் அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதார செயலாளர் பூஷனின் கடிதத்திற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, மகாராஷ்டிரா கூடுதல் செயலாளர் (சுகாதாரம்) பிரதீப் வியாஸ் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ரயில்கள், பேருந்துகள், திரையரங்குகள், ஆடிட்டோரியம், அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment