மலிவு விலையில் கொரோனா மருந்து.! தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அதிரடி.!

கொரோனா வைரசுக்கு விரைவான மற்றும் மலிவான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி ஆராய்ச்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ள தாய்லாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், எலிகள் மீது வெற்றிகரமாக சோதனைகள் செய்த பிறகு மக்காக் குரங்குகள் மீது பரிசோதனையை தொடங்கியுள்ளது. இது 2021 ஆம் ஆண்டுக்குள் கொரோனா வைரசை தடுப்பதற்கான ஒரு சிறப்பான தடுப்பூசியை தாய்லாந்து தயாரிக்கும் என அந்நாட்டின் உயர் தலைமை கூறியுள்ளது. மேலும் விரைவான மற்றும் மலிவான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சுமார் 13 குரங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனையை மேற்பார்வையிட்டு வரும் தாய்லாந்து தேசிய பிரைமேட் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சுசிந்த மால்விஜிட்ஜோண்ட் கூறுகையில்,  மேட் இன் தாய்லாந்து தடுப்பூசி ஐரோப்பிய அல்லது அமெரிக்க மருந்துகளை விட மலிவானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். கடந்த ஜனவரி கொரோனா பரவியபோது சீனாவுக்கு பிறகு அந்த வைரஸ் தாய்லாந்தில் தான் அதிகம் பரவியது. ஆனால், அரசின் சிறப்பான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை வெறும் 3,054-ல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அங்கு மொத்தம் 57 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்