மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடக்கம் -அமைச்சர் விஜயபாஸ்கர்.!

மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் காலை முதல் தொடங்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் . அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குமான கலந்தாய்வில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது .

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள 39,000-க்கும் மேற்பட்டோர் நவம்பர் 12-ஆம் தேதி வரை விண்ணப்பத்திருந்தனர் . அதில் 35,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது.

தற்போது மருத்துவ படிப்புக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார். மேலும் இந்தாண்டு அரசு பள்ளிகளில் பயின்ற 405 மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர்களுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலில் முதலிடத்தை 710 மதிப்பெண்களுடன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஸரீஜன் என்ற மாணவனும் ,  இரண்டாம் இடத்தை 705 மதிப்பெண்களுடன் நாமக்கல்லை சேர்ந்த மோகனப்பிரபா என்ற மாணவியும் , மூ ன்றாவது இடத்தை 701 மதிப்பெண்களுடன் சென்னையை சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவியும் பெற்றுள்ளனர் . மேலும் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் 664 மதிப்பெண்களுடன் தேனியை சேர்ந்த ஜீவித்குமார் என்ற அரசு பள்ளி மாணவன் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் தரவரிசையில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வானது நவம்பர் 18-ஆம் தேதி காலை முதல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து தொடங்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். மேலும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவருடன் ஒருவர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் , கலந்தாய்வு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதல்கட்ட கலந்தாய்வில் சிறப்பு பிரிவு மாணவர்களும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களும், மூன்றாவது கட்டத்தில் பொதுப் பிரிவினரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment