தனியார் விளம்பர பலகையை கிழித்தெறிந்த எம்.எல்.ஏவிற்கு குவியும் பாராட்டுகள்..!

சென்னை துரைப்பாக்கத்தில் தனியார் விளம்பர பலகையை கிழித்தெறிந்த எம்.எல்.ஏவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

சென்னை துரைப்பாக்கம் கார்ப்பரேஷன் சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் பக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்காவை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து இதனை பராமரித்து வந்துள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த பூங்காவின் வெளியே காவலாளி ஒருவரை நியமித்து பூங்காவிற்கு மக்கள் நுழைவதை தடுத்து வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சோழிங்கநல்லூர் திமுக எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் அவ்விடத்திற்கு நேரில் சென்றுள்ளார். அங்கிருந்த தனியார் கட்டுமான விளம்பர பலகையை கிழித்து எறிந்துள்ளார்.

மேலும், அங்கு பெருநகர சென்னை மாநகராட்சி திறந்தவெளி பூங்கா என்ற பலகையை வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். இதனால் இவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.