அதிமுகவில் பழைய விதிகளை தொடர்ந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
பொதுக்குழு தீர்மானம் :
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கேட்டும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு:
இந்த வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சுமார் 7 மணிநேரம் நடந்த இந்த வழக்கு விசாரணையில் தற்பொழுது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
போட்டியிட தயார் :
இந்நிலையில் மயிலாடுதுறையில் பேட்டியளித்த ஓபிஎஸ், அதிமுகவில் உள்ள புதிய விதிகள் நீக்கப்பட்டு பழைய விதிகளை தொடர்ந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். மேலும், அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்த விதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என அவர் கூறினார்.
பொதுச்செயலாளர் விதிமுறை :
அதிமுக பொதுச்செயலர் தேர்தலில் போட்டியிட 10 வருட கட்சி உறுப்பினராகவும், 5 வருட கட்சி பதவியும் வகித்து இருக்க வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் எனவும் விதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.