ஐயப்ப பக்தர் போல் வலம் வந்த கோவை நகைக்கடை கொள்ளையன் கைது.. துணை ஆணையர் விளக்கம்!

கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான விஜய் கைது குறித்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார். கடந்த 28ம் தேதி கோவையில் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 5.16 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்த்தியை ஏற்படுத்தியது.

கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. இதில் தர்மபுரியை சேர்ந்த விஜய், அவரது  மனைவி மற்றும் மாமியார் ஆகியோருக்கு நகைக்கடை கொள்ளையில்  தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன்பின் விஜய் (700 கிராம் ), அவரது மனைவி (3.2 கிலோ), மற்றும் மாமியார்  (1.35 கிலோ) ஆகியோரிடம் நகைகளை போலிசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று 12 நாட்களுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி விஜய் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனிடையே, விஜயின் தந்தை முனிரத்தினத்திடம் தனிப்படை போலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ராமஜெயம் கொலை வழக்கில் ஆஜரான பிரபாகரன் வெட்டிக்கொலை.. 4 பேர் கைது!

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 95% மீட்கப்பட்டதாக கோவை போலீசார் தெரிவித்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான விஜயிடம் கோவை காவல்துறை  விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை ஆணையர், காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜயை நேற்று போலீஸ் கைது செய்தது.

ஐயப்பன் பக்தர் போல மாலை அணிந்து வலம் வந்த விஜயை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நவ.28ம் தேதி ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 5.16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை போன 10 நாட்களில் 5.12 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் வைர நகைகள் மட்டும் மீட்கப்படவில்லை. கொள்ளையன் விஜயை பிடிப்பதில் மிகுந்த சவால் இருந்தது.

கோவை நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் சென்னை கோயம்பேடு அருகே செல்போன் சிம் வாங்க முயன்ற போது கைது செய்யப்பட்டார். 300கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையன் விஜயை பிடித்துள்ளோம். அவரை கைது செய்தபோது 700 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கோவை நகைக்கடை சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என விளக்கமளித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்