வாடிவாசல் ரெடி.! கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்க ஜல்லிக்கட்டு போட்டி இன்னும் சில மணி துளிகளில்…

தமிழரின் வீரவிளையாட்டுகளில் முக்கியமான ஒன்றாக போற்றப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ் பெற்றவை. ஆனால் அங்கு பாரம்பரியமாக போட்டிகள் நடத்த இடம் இருந்தாலும், பார்வையாளர்கள் அனைவரும் வந்து பார்க்கும்படியான இடவசதி இல்லை.

திட்டம் :

பார்வையாளர்களை கருத்தில் கொண்டு கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , அலங்காநல்லூர் பகுதியில் அனைவரும் கண்டுரசிக்கும்படியான வகையில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என அறிவித்து அதற்கான வேலைகளை தமிழக அரசு ஆரம்பித்தது.

அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு… எத்தனையாயிரம் காளைகள்.? எத்தனையாயிரம் வீரர்கள்.?

பிரமாண்ட மைதானம் :

அதன்படி, அலங்காநல்லூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் கீழக்கரை கிராமம் வகுத்தமலை அடிவாரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, 66.80 ஏக்கரில் ஜல்லிக்கட்டு மைதானம் 44 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.  16 ஏக்கரில் மாட்டும் ஏறுதழுவதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்க கட்டிடட பரப்பளவு 77,683 சதுரஅடியாகும். இதில் சுமார் 4500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுரசிக்கமுடியும்.

திறப்பு விழா :

இந்த மைதானமானது முதலில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திறக்கப்பட இருந்தது. ஆனால், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருந்ததால் இந்த ஜல்லிக்கட்டு மைதானம் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டு இன்று (ஜனவரி 24)  திறக்கப்பட உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் :

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த புதிய பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார்.

500 காளைகள் – 300 காளையர்கள் :

இதுவரை 9,312 ஜல்லிக்கட்டு காளைகளும், 3669 மாடுபிடி வீரர்களும் madurai.nic.in என்ற தளத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பதிவு செய்த நிலையில், இன்று 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது 5 நாட்கள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அதுபற்றிய உறுதியான தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.

மஹிந்திரா தார் கார் பரிசு :

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் முதல் பரிசை வெல்லும் ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளருக்கும் மற்றும் மாடுபிடி வீரருக்கும் தலா ஒரு மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்படும் எனவும் தலா 1 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.