நெடுஞ்சாலை துறைக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்.!

சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகள் போட வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல்.

இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறையை சார்ந்த சாலைகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்கனவே, உள்ள சாலை மட்டத்தினை உயர்த்துவதால் சாலையின் தன்மை பாதிக்கப்படுகிறது.

எனவே, நெடுஞ்சாலைத்துறை மூலமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளும்போது சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் அமைக்கும் வகையில் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளின் மேற்தளம் ஏற்கெனவே போதுமான கனத்துடன் (Crust) கட்டமைக்கப்பட்டுள்ளதால் பி.பி.டி. சோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை. எந்த சூழ்நிலையிலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் மட்டம் அதிகரிக்கப்படக்கூடாது.

சாலைகளின் மேற்தள கட்டுமானத்தை மட்டும் தேவைப்படும் களத்திற்கு சுரண்டி எடுத்துவிட்டு (Milling) அதே அளவுக்கு மேற்தளம் இடவேண்டும். இது வீடுகளுக்குள் நீர் புகுவதைத் தடுக்கும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் தார் மேற்தளத்திற்கு (BC) மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

சாலை தார் மேற்தள கனமானது ( thickness of BC), இந்திய சாலை காங்கிரஸ் விதி 37- 2018-ன் படி சாலையின் போக்குவரத்து செறிவுக்கேற்ப மாறுபடும் என தலைமை செயலாளர் நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்