“குறுவை நெல் கொள்முதல் பணிகள்;அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு..!

தமிழகத்தில் குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

குறுவை நெல் கொள்முதல் பணிகள் தொடர்பாக நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தற்போதைய கொள்முதல் பணிகள் குறித்து விவரங்களைக் கேட்டறிந்தார்.

இதனையடுத்து,தமிழகத்தில் குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.மேலும்,தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும், கொள்முதல் பணிகள் சிறப்பாக நடப்பதை உறுதி செய்யவும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரை முதல்வர் அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து,குறுவை பருவ நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் தற்போது 843 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும், கடந்த 1-10-2021 முதல் 6-10-2021 வரையில் 36 ஆயிரத்து 289 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.