விவசாயிகளுக்கு நற்செய்தி…முதல் முறை;மேட்டூர் to கடைமடை – திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை (24-ஆம் தேதி) தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் இந்த ஆண்டு முன்கூட்டியே நாளை (மே 24-ஆம் தேதி) திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. நீர் வரத்து அதிகம் உள்ளதால் வழக்கத்தை விட முன்கூட்டியே அணை திறக்கப்படுகிறது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால்,மேட்டுர் அணைக்கு அதிக நிர்வரத்து உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே,காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அனையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12க்கு முன்பாகவே,மே 24 முதல் நீரைத் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.நமது நாடு சுதந்திரம் அடைந்தது முதல், குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்படும் நாளாகிய ஜூன் 12-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீர் திறந்து விடப்படுவது இது 2வது முறையாகும்.

இது மட்டுமன்றி மே மாதத்தில் இவ்வாறு மிக முன்னதாக பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால் திருச்சி தஞ்சாவூர். திருவாரூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பொம்பலூர் புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

மேலும்,ஆறுகளில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த பணிகள் அனைத்தும் வரும் மே31-க்குள் முடிவடையும். இதனால், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது முழுமையாக டெல்டா பகுதியின் கடைமடை வரை அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அடைய ஏதுவாகும்.

இது மட்டுமன்றி தொடர்ந்து நீண்டகாலத்திற்கு நீர் கிடைக்கப் பெறுவதால் டெல்டா பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உயர்வதற்கும் இது வழிவருக்கும். விவசாய இடுபொருட்களும் வேளாண் கடன்களும் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்,நீரை முறையாகப் பயன்படுத்தி அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி செய்து இந்த ஆண்டும் நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைத்து வளம் பெருகிட வேண்டும் என்று டெல்டா பகுதி விவசாயிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாளை (24-ஆம் தேதி) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார்.அதன்பின்னர்,பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு முதலமைச்சர் உரையாற்றவுள்ளார்.

Leave a Comment