#Breaking:முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணை நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து,மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆனால், மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனுக்கு, சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டதாக கூறி,அவரை புழல் சிறைக்கு அதிகாரிகள் மாற்றம் செய்தனர்.

இதனையடுத்து,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விவகாரத்தில் கோபாலபுரத்தை சேர்ந்த மருத்துவரிடம் அடையாறு மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது,மணிகண்டன் அவர்கள் கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக மருத்துவர் வாக்குமூலம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து,நடிகையுடன் ஹோட்டலில் மணிகண்டன் தங்கியிருந்ததற்கான ஆதாரம் சிக்கியது.இதனால்,சம்மந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியது.இதற்கிடையில்,அவரின் 2 செல்போன்கள் சைபர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.மேலும்,நடிகையின் செல்போனையும் போலீசார் சோதனை செய்தனர்.

அதன்பின்னர்,நடிகைக்கு அனுப்பிய ஆபாச எஸ்எம்எஸ்கள் மற்றும் வீடியோக்களை அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உடனுக்குடன் அழித்ததாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்தது.மேலும்,கடந்த சில நாட்களுக்கு முன்னர்  மணிகண்டன் அவர்களை,காவலில் எடுத்து மதுரைக்கு அழைத்து சென்று மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில்,மணிகண்டன் அவர்கள் முன்ஜாமீன் கோரிய மனு  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் அமர்வு முன் விசாரணைக்கு நேற்று வந்தது.அப்போது மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்,”நடிகையின் சம்மதத்துடன் தான் கருக்கலைப்பு நடந்தது.எனவே,இது பிளாக்மெயில்காக தொடரப்பட்ட வழக்கு”,என்று தெரிவித்தார்.இதனால்,இந்த தீர்ப்பை நீதிபதி இன்று ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில்,அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும்,”இரண்டு வாரம் தினமும் காவல்துறைக்கு முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும்,பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் மணிகண்டன் ஒப்படைக்க வேண்டும்.மேலும்,நடிகை குறித்த பேட்டி யாருக்கும் அளிக்க கூடாது” என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.