கர்நாடக தேர்தல் களத்தில் பரபரப்பு – உடைத்து நொறுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் கிரமாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கர்நாடகவில் மொத்தமுள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 வரை நடைபெறுகிறது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி, பாஜக 224, காங்கிரஸ் 223, மதசார்பற்ற ஜனதா தளம் 207, பகுஜன் சமாஜ் கட்சி 193 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. கர்நாடக தேர்தலில் 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

கர்நாடக மாநிலம் முழுவதும் 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி கர்நாடகாவில் 37.25% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த சமயத்தில், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

அதாவது, கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டத்தின் மசபின்னலா கிராமத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் கிரமாக மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கோபத்தில் அதிகாரிகளின் வாகனத்தை சேதப்படுத்தி, வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து, அடித்து உடைத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

வாக்குகள் பதிவான இயந்திரங்களை அதிகாரிகள் திட்டமிட்டு அறைக்கு மாற்றியதாக பரவிய செய்தியே வானுமரைக்கு காரணம் என காவல்துறை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த விவகாரம் தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்